ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்க மக்களுக்கு இன்று உருக்கமான பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஈரானை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகச் சித்தரிப்பதை மறுத்துள்ள அவர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போதைய போரில் ஈடுபட்டு வருதன் பின்னணியில் உள்ள நோக்கங்களை மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன் உண்மையில் அமெரிக்கா முதல் என்ற தனது கொள்கையைப் பின்பற்றுகிறதா அல்லது இஸ்ரேலின் கைப்பாவையாகச் செயல்பட்டு அமெரிக்க வீரர்களின் உயிரைப் பலி கொடுக்கத் துணிகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
To the people of the United States of America pic.twitter.com/3uAL4FZgY7
— Masoud Pezeshkian (@drpezeshkian) April 1, 2026
ஈரான் மக்கள் அமெரிக்கர்கள் அல்லது ஐரோப்பியர்கள் உட்பட எந்த நாட்டு மக்கள் மீதும் பகைமை கொண்டிருக்கவில்லை என்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் இடையே ஈரான் எப்போதும் தெளிவான வேறுபாட்டைக் கண்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கள் நாடு ஒருபோதும் போரைத் தொடங்கியதில்லை என்றும் அதே சமயம் தன் மீது தாக்குதல் நடத்துபவர்களைத் துணிச்சலுடன் முறியடிக்கத் தயங்கியதில்லை என்றும் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார். ஈரானை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலிய அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு போலியான பிம்பம் என்று அவர் சாடியுள்ளார்.
புற்றுநோய் மருந்து தயாரிப்பு மையங்களை அழிப்பதும் ஒரு நாட்டை கற்காலத்திற்குத் தள்ளுவோம் என்று மிரட்டுவதும் அமெரிக்காவின் உலகளாவிய நற்பெயருக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கப் பொதுமக்கள் தவறான தகவல்களைத் தாண்டி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் வீரர்களையும் இஸ்ரேல் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஈரான் அதிபரின் இந்தக் கடிதம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
