இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி மழையால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா –  பாகிஸ்தான் அணிகள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது. நேற்று தொடங்கிய இப்போட்டியில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும்  சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.  கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்னர். தொடர்ந்து திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டு, ரிசர்வ் டேவான செப்டம்பர் 11, அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு  போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருந்தது. கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மீண்டிடும் கொழும்பில் மழை பெய்த காரணத்தால் 4:40 மணியளவில், ஓவர்கள் குறைப்பு இல்லாமல் மீண்டும் தொடங்கியது. அதன்படி  கே எல் ராகுலும், விராட் கோலியும் களமிறங்கி சிறப்பாக ஆடி சதமடித்தனர். இருவரும் சிறப்பான சதங்களுடன் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் 3வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 233 ரன்கள் சேர்த்தனர், இதனால் இந்தியா 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்தது. கோலி 94 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 122* ரன்கள் எடுத்தார் மற்றும் ராகுல் 106 பந்துகளில் (12 பவுண்டரி, 2 சிக்ஸர்) 111* ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக பக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறச் செய்தனர். தொடர்ந்து பும்ரா தனது 5வது ஓவரில் இமாம் உல் ஹக்கை 9 ரன்களில்  வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது 11 வது ஓவரில் கேப்டன் பாபர் அசாமை (10 ரன்கள்) போல்ட் செய்து வெளியேற்றினார். பின்னர் பாகிஸ்தான் அணியில் பகார் ஜமான் (14) மற்றும் முகமது ரிஸ்வான் (1) இருவரும் ஆடி வந்தனர். அப்போது மீண்டும் மைதானத்தில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி  நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 11 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களுடன் உள்ளது. தற்போது மழை நின்றுள்ளதால் சிறிது நேரத்தில் போட்டி தொடங்கலாம்..