இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று பாட்னாவில் ரசிகர்கள் ஹோமம் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்..

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2023 உலகக் கோப்பை போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு நடைபெறுகிறது. உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் தங்களது முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று வெற்றி பெறும் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும். அதே நேரத்தில் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வெல்லவில்லை. எனவே அந்த வரலாற்றை மாற்றி எழுத பாகிஸ்தான் இன்று போராடும். அதேசமயம் சொந்த மண்ணில் உலக கோப்பையில் 8வது முறை பாகிஸ்தான வீழ்த்தி, அந்த சாதனையை அப்படியே தொடர இந்தியாவும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் தற்போது மைதானத்திற்குவெளியே குவிந்து வருகிறார்கள். 1,10,000 இருக்கைகள் கொண்ட இந்த மைதானம் இன்று நிரம்பி வழியும். இந்த போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 11,000 மேற்பட்டோர் அகமதாபாத் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாட்னாவில் ரசிகர்கள் ஹவன் (ஹோமம்) வளர்த்து, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை அதில் காட்டி இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என பூஜை செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.