மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் (Borivali Railway Station) ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த ஒரு நபர், அமைதியாக அழுது கொண்டிருந்ததைக் கண்ட திலக் துபே என்ற பயணி, அந்த உருக்கமான தருணத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ரயில் நிலையம் கிட்டத்தட்ட காலியாக இருந்த நிலையில், திலக் தனது ரயிலைத் தவறவிட்டதாகவும், அப்போது அவர் அருகில் தலையைக் குனிந்து கண்ணீருடன் அமர்ந்திருந்த நபரைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த நபர் சத்தமாக அழாமல், தன்னுடைய வலியை யாருக்கும் காட்ட விரும்பாமல் அமைதியாக அழுது கொண்டிருந்ததாகத் திலக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக அந்த நபரிடம் சென்று, “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” என்று திலக் கேட்டபோது, அந்த நபர் நிமிர்ந்து பார்த்தார். அவர், “சும்மா ஏதோ நினைவுக்கு வந்தது… விசாரித்ததற்கு நன்றி” என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டார்.
இதைக் குறித்துத் திலக், “ஆண்களும் அழுவார்கள், ஆனால் மவுனமாக மட்டுமே” என்றும், “சில நேரங்களில் வலியின் ஒரே மொழி மௌனமாகத் தான் இருக்கும்” என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “உங்களுடைய ஒரு ‘சின்ன’ விசாரிப்பு, ஒருவரின் வாழ்வில் நம்பிக்கையை வளர்க்கலாம்” என்றும், “இந்த வார்த்தைகள் பல ஆண்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது” என்றும் கருத்து தெரிவித்து அந்தப் பதிவைப் பாராட்டி வருகின்றனர்.
