பூவிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு மணிவண்ணன் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது விருதாச்சலம் அரசு பணிமனை 2-ல் ஓட்டுநராக வேலை பார்க்கும் பொன்னிவளவன் என்பவர் மதுபோதையில் பேருந்துக்கு குறுக்கே சென்றார். இதனால் பொன்னிவளவனுக்கும், மணிவண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். அப்போது பொன்னிவளவனுக்கு ஆதரவாக சில டிரைவர்கள் வந்து ஜெயங்கொண்டம் பேருந்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.