மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் முதற்கட்டமாக 7 பேர் பலியான நிலையில், தற்போது மேலும் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

முதலில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டிருப்பதால் தீயணைப்பு துறையினரால் நெருங்க முடியவில்லை. பட்டாசு ஆலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்த நிலையில், பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பட்டாசு ஆலை அருகில் இருந்த 60 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகள் காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகளால் காலி செய்யப்பட்டுள்ளன. மேலும், வெடிவிபத்தால் கணிசமான எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின. இதனிடையே காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அதிகாரிகளுடன் பேசி, சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவத்தின் வீடியோவில், தொழிற்சாலையில் இருந்து உயரமான தீப்பிழம்புகள் மற்றும் புகை மூட்டப்படுவதைக் காட்டுகிறது. அதை ஒட்டிய சாலையில் வெடிப்புச் சத்தம் காற்றில் ஒலிப்பதால் மக்கள் பீதியில் ஓடுவதைக் காணலாம்.

தீ விபத்திற்குப் பிறகு தப்பியோடிய தொழிற்சாலை ஊழியர் ஒருவர், சம்பவம் நடந்தபோது சுமார் 150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாகக் கூறினார். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையையும் அழைத்துள்ளோம் என்று மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.

இதில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/neha_bisht12/status/1754796741063270720