உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டத்தில், சிறிய கிராம மளிகைக் கடை நடத்தி வரும் சுதிர் என்பவருக்கு 141 கோடி ரூபாய்க்கு வரி நோட்டீஸ் வந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தனது பான் கார்டு விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, டெல்லியில் ஆறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த நோட்டீஸ் வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புலந்த்ஷாரின் குர்ஜா பகுதியில் உள்ள நயாகஞ்ச் பகுதியில் வசிக்கும் சுதிர், தனது வீட்டில் ஒரு சாதாரண மளிகைக் கடையை நடத்தி வருவதாகவும், 2022ஆம் ஆண்டு முதல் முறையாக இதேபோன்ற நோட்டீஸ் வந்தபோது, இந்த நிறுவனங்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வரி அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, மற்றொரு நோட்டீஸ் வந்தபோது, 1,41,38,47,126 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்பட்டு, சுதிர் அதிர்ச்சியடைந்தார். தனது பான் கார்டு மூலம் டெல்லியில் பல நிறுவனங்கள் மோசடியாக உருவாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக குர்ஜா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல் அதிகாரி பங்கஜ் ராய் தெரிவித்தார். பான் கார்டு மோசடி என்பது, வங்கிக் கணக்குகள் தொடங்குவது, போலி நிறுவனங்கள் உருவாக்குவது, கடன் பெறுவது அல்லது வரி ஏய்ப்பு செய்வது போன்றவற்றுக்கு மற்றவரின் பான் விவரங்களை தவறாகப் பயன்படுத்துவதாகும்.

இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, கிரெடிட் அறிக்கைகளை தவறாமல் பரிசோதிக்கவும், பான் கார்டை ஆதாருடன் இணைக்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.