கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டி பாளையம் ராமராஜன் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் தண்டபாணி என்பவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்த ராமனை அணுகியுள்ளார்.

அப்போது ராமன் 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராமனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.