திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டியில் சமையல் தொழிலாளியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காளீஸ்வரி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது காளீஸ்வரி கூறியதாவது, ஊராட்சி செயலாளர் ஒருவர் என்னை தர குறைவாக பேசினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சிலர் என்னை மிரட்டுகின்றனர். இதனால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக காளீஸ்வரி தெரிவித்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மனு கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.