ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தாய்க்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் அன்பரசன் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என கூறியுள்ளார். அப்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என ரவி கூறியுள்ளார். முடிவில் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு பேரம் பேசப்பட்டது. இது தொடர்பாக ரவி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரவி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அன்பரசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்பரசனை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.