ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹாசா(21) என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் ஹாசா கரும்பு ஜூஸ் வாங்கி தருகிறேன் என கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முள் காட்டு பகுதியில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் ஹாசாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் ஹாசாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.