நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ராஜ்குமார் பேருந்தை ஓரமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பாறை மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த அரசு போக்குவரத்து கழக கோத்தகிரி கிளை மேலாளர் ஞானபிரகாஷ் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பயணிகள் வேறு வாகனங்கள் மூலம் கருக்கையூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.