கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் “ஆற்று திருவிழா” நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, மணலூர்பேட்டை பேரூராட்சி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும் சாமிகள் இளைப்பாற பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பந்தக்கால் நடும் பணி பூஜை நடைபெற்றுள்ளது. பூஜை முடிந்த பிறகு விழா நடைபெறும் இடத்தை சமன் செய்வதற்காக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில் தொழிலாளர்கள் ஆற்றில் பள்ளம் தோண்டிய போது 2 அடி உயரமுடைய அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது எந்த வகையான உலோகம் என்பது தெரியவில்லை. இதனை அறிந்த திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் சிலையை மீட்டார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் அந்த சிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளார்.