கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை  அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் ஒன்று இருக்கிறது. இந்த முகாமில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளைப் பிடித்து அதற்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதில் கும்கி யானைகளும் அடங்கும். இங்கு வருடந்தோறும் பொங்கலுக்கு மறுநாள் யானை பொங்கல் விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து அவ்விழாவினை சிறப்பாக  கொண்டாடியுள்ளனர்.

இவ்விழாவிற்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ தேஜா தலைமை தாங்கியுள்ளார். மேலும் வனச்சரகர்கள் சுந்தரவேல், புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள், யானை பாகன்கள் உள்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இதையடுத்து  முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.

மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது, இம்முகாம்களில் மொத்தம் 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் உள்ள  கலீம், கபில்தேவ், முத்து ஆகிய யானைகள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே அந்த 3 யானைகளால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை. மேலும் விழாவில் யானைகளுக்கு ஆப்பிள், அன்னாச்சி பழம், கரும்பு, வாழைப்பழம், பொங்கல், ராகி உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்று கூறியுள்ளார்.