மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர் திருடர்களை சொகுசு ஹோட்டல்களில் தங்க வைத்து, எந்த இடத்தில் திருட வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை வழங்கி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது அபிலாஷுடன் யஷ்வந்த் ரகுவன்ஷி மற்றும் பூபேந்தர் சாஹு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு திருடிய தங்க நகைகளை மண்டிதீப்பில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸில் அடகு வைக்க, கடன் பெற்று அதை வர்த்தக முதலீடாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

தற்போது, 22 லட்சம் மதிப்புள்ள தங்கம், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான திருட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், அபிலாஷ் கடந்த 2024ஆம் ஆண்டு, வாரங்கலிலிருந்து திருடர்களை அழைத்து வந்து திருட்டுகளை திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். போலீசார் தற்போது வாரங்கலிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வாரங்கலுக்கு விசாரணைக் குழு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திருட்டு கும்பல் இதுவரை 12க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக அபிலாஷ் ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார் இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.