தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து 4 மாத ஆண் குட்டி யானை தாயை பிரிந்து வெளியேறியது. இந்நிலையில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்த யானை செல்வன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் 1  மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி யானை குட்டியை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் நிற்க கூட முடியாமல் தவித்த குட்டிக்கு பொதுமக்கள் உணவு அளித்தனர். இதனை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறையினர் குட்டி யானையின் உடலில் காயங்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர். பின்னர் வனத்துறையினர் யானையை வாகனத்தில் ஏற்றி போட்டூர் சின்னாறு வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.