தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கோவிந்தம்மாவினால் வீட்டு வேலைகளை செய்ய இயலவில்லை. இதனால் பவித்ராவை உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால் பவித்ரா தனது தாய்க்கு எந்த உதவியும் செய்யாததால் கோவிந்தம்மாள் தனது மகளை கண்டித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலகோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.