கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் அவரை சூழ்ந்து கால்வாய் அமைக்கவும், பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தினர். மேலும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது வெள்ளத்தால் இடிந்த வீட்டில் கை குழந்தையுடன் தவித்த பெண்ணின் கண்களை துடைத்து அமைச்சர் ஆறுதல் கூறியதோடு உடனடியாக தங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டா கேட்ட பொழுது தாசில்தார் அங்கு வராததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5 நிமிடத்திற்குள் வரவேண்டும் என உத்தரவிட்டதோடு 15 நாட்களுக்குள் பட்டா அளிக்க ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார்.