சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் ராஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையமும், மற்றொரு கடையில் தையல் கடையும் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்தில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் ஏ.டி.எம் மையம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் இருக்கும் பெட்டிக்குள் தீப்பிடித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் மும்பையில் இருந்து வங்கி ஊழியர்கள் வந்து அந்த பெட்டியை திறந்து பார்த்தால் தான் 20 லட்ச ரூபாய் பாதுகாப்பு இருக்கிறதா? அல்லது தீயில் எரிந்ததா? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.