சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு சீனிவாசன் நகரில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா(29) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மனைவியின் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சுரேஷ் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் சுகன்யா மயங்கி விழுந்துவிட்டார். உடனே அச்சத்தில் சுரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து மயக்கம் தெளிந்து எழுந்த சுகன்யா சுரேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.