சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி கடந்த 15- ஆம் தேதி நள்ளிரவு நேரம் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த டிப்பர் லாரியிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரிகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் டாரஸ் லாரியை அதன் ஓட்டுனர் ரமேஷ் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அந்த லாரி பவளத்தாநூரை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கு சொந்தமானது.

இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். தற்போது ரமேஷின் மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரமேஷ் சுந்தரத்திடம் சென்று நீண்ட நாட்கள் தரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டுள்ளார். அப்போதும் சுந்தரம் சம்பளப் பணத்தை இப்போது கொடுக்க முடியாது, என்ன வேண்டுமானாலும் செய் என திட்டி விரட்டி அடித்ததாக தெரிகிறது. இதனால் மதுபோதையில் ரமேஷ் டாரஸ் லாரிக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.