சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்லையம்மன் கோவில் தெருவில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மனைவி, மகனுடன் தாம்பரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் ராணுவ பீரங்கி அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வினோத் உடனடியாக காரை நிறுத்தி மனைவி மற்றும் மகனுடன் கீழே இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.