திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவின் உத்தரவின்படி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருச்சி இ.பி ரோடு தேவதானம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக கூறியுள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் தற்போது முத்தரசநல்லூரை சேர்ந்த ஒருவரிடம் இருக்கிறது. இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.