திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஒரு டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு காலை நேரம் சென்ற ஒருவர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் டீக்கடைக்காரரிடம் காண்பித்து முறையிட்டுள்ளார். ஆனால் டீக்கடைக்காரர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து அந்த நபர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அலுவலர்கள் டீக்கடைக்கு சென்று வடையில் ஈ இருந்ததை உறுதி செய்தனர். மேலும் தரமற்ற எண்ணெய் மூலம் வடை தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் வடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் டீக்கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து இதுபோன்று மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.