ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஸ்வேதாவின் தாயார் மஞ்சுளாதேவி கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்வேதாவை தேடி வந்தனர்.‌

இந்நிலையில் கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வெள்ளை நிற சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்குப்பையை பிரித்துப் பார்த்தபோது ஸ்வேதா உடல் முழுக்க காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. ஸ்வேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், லோகேஷ் என்ற வாலிபரிடம் ஸ்வேதா கடைசியாக பேசியது தெரிய வந்ததால் அவரை பிடித்து போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள். லோகேஷ் ஸ்வேதாவுடன் ஒன்றாக பள்ளியில் படித்தவர் இருவரும் பழகி காதலித்திருக்கலாம்.

அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் லோகேஷ் ஸ்வேதாவை கொலை செய்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் லோகேஷை ஸ்வேதா காதலித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமானதால் நியாயம் கேட்பதற்காக மாணவி அங்கு சென்றதாகவும் அப்போதுதான் லோகேஷின் குடும்பத்தினால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் பனங்காட்டு படை கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் லோகேஷ் குடும்பத்திற்கு காவல்துறையினர் துணை போவதாகவும் பனங்காட்டுப்படை கட்சியினர் பரபரப்பு தகவலை கூறியுள்ளனர்.