
சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய நிலையில் காரை ராஜ்குமார் ஓட்டினார்.
அவர்கள் அதிகாலையில் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழரசி மற்றும் அவருடைய மகன் அஸ்வரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பிறகு ராஜ்குமார் மற்றும் அவர்களுடன் இருந்த பிற உறவினர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.