கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில், சாலிகிராமா தாலுக்கில் உள்ள பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், 20 வயது திருமணமான பெண்ணை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹுன்சூர் தாலுக்கில் உள்ள கெரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷிதா என்ற அந்தப் பெண், கேரளாவைச் சேர்ந்த ஒரு குடியேறிய தொழிலாளியை திருமணம் செய்திருந்தாலும், பெரியபட்டணா தாலுக்கில் உள்ள பெட்டதபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார்.
லாட்ஜில் தங்கியிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து, சித்தராஜு ரக்ஷிதாவின் வாயில் வெடிமருந்து கலவையை திணித்து கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலையை மறைக்க, மொபைல் போன் வெடித்ததால் ரக்ஷிதா இறந்ததாக சித்தராஜு பொய் கூறி ஏமாற்ற முயன்றார். ஆனால், அவரது பொய்யை உள்ளூர் மக்கள் கண்டுபிடித்து, தப்பிக்க முயன்ற அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சாலிகிராமா காவல்துறையினர் சித்தராஜுவை கைது செய்தனர்.
மைசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுவர்தனா என் கூறுகையில், “குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் கேரளாவில் உள்ள ஒருவரை திருமணம் செய்திருந்தார், ஆனால் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தார். கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். அவர் பயன்படுத்திய வெடிமருந்து கலவையை FSL (தடய அறிவியல் ஆய்வகம்) குழு ஆய்வு செய்து வருகிறது,” என்றார். இந்த கொடூர சம்பவம் மைசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
