சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அக்பர் நகரில் இன்ஜினியரிங் பட்டதாரியான திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போரூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திவ்யா தனது தாய் மகேஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டேரி 100 அடி சாலை வாட்டார் கேனல் சந்திப்பு அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த திவ்யா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு திவ்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.