திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க  இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர்.இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி உள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும். திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, எந்த சிக்கலையும் யாரும் ஏற்படுத்தவும் முடியாது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், 3 தொகுதிகள் கேட்டிருந்தோம். இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது பின்னர் அறிவிக்கப்படும். 40 தொகுதிகளும் எங்கள் தொகுதி என்ற அடிப்படையிலேயே பணியாற்றுவோம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதால் எந்தெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிவெடுக்க வேண்டி உள்ளது” என்றார். கடந்த முறை கோவை, மதுரை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.

ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ராமநாதபுரம் தொகுதி ), கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (நாமக்கல் தொகுதி) ஆகிய கட்சிகளுக்கு திமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.. இன்று விசிக மற்றும் மதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்..