திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

நேற்று 2-வது நாளாக பொக்லைன் இயந்திரம் மூலம் அய்யலூரில் சாலையோரமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2  மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்தது. அப்போது பொக்லைன் எந்திர ஆபரேட்டராக நல்லுசாமி என்பவர் இருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக நல்லுசாமி காயமின்றி உயிர் தப்பினார். மேலும் கட்டிடம் இடிந்து விழுந்ததால் பொக்லைன் எந்திரம் சேதமடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.