கொல்கத்தா அருகே ஓடும் ரயிலில் ஒரு இளைஞர் கும்பல் செய்த ஆபத்தான சாகசங்களும், ரகளையும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் கிதிர்பூர் (Khidirpur) ரயில் நிலையம் அருகே ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ரயிலில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு இளைஞர் கும்பல், ரயிலின் அவசர கால சங்கிலியை (Emergency Chain) இழுத்து விளையாடியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், ரயிலின் மேற்கூரையைப் பிடித்துத் தொங்குவது, படிக்கட்டில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் வெளியே சாய்வது எனப் பல உயிரைப் பணயம் வைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிப் பலரது கண்டனங்களைப் பெற்ற நிலையில், சீல்டா ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இதற்குப் பதிலளித்துள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமீறல்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது. ‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்கள் இது போன்ற விபரீதங்களில் ஈடுபடுவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.