அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக வைத்திருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. அதன் முதல் பரிசாக 10 லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக 5 லட்ச ரூபாயும், மூன்றாம் பரிசாக 3 லட்ச ரூபாயும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய (tnpcb.gov.in) இணையதளம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் (http://Ariyalur.nic.in) ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி ஆகும் என கூறியுள்ளார்.