திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூரில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டீ தூள் கம்பெனியில் ஏஜெண்டாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் 3 லட்ச ரூபாய் கடன் பெற வேண்டும் என்றால் செயல்முறை கட்டணமாக 7,600 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து கடன் தருவதற்கு முன்னால் உங்கள் வீட்டை பார்வையிட அலுவலர்கள் வருவார்கள். அதற்கு 28 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மீண்டும் அந்த தொகையை உங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் என தெரிவித்தார். இதனை நம்பி அவர்கள் கூறிய அறிவுரைப்படி ஆரோக்கியராஜ் இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய் வரை கொடுத்துள்ளார். அதன் பிறகும் அவருக்கு கடன் தொகை கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆரோக்கியராஜ் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.