கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழம்பட்டு கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழ்மாறன்(20) செட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தமிழ்மாறனுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்களான திருப்பதியான்(16), சஞ்சய்(17) ஆகியோர் தமிழ் மாறனுக்கு பரிசு கொடுக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வடலூருக்கு சென்று பிறந்தநாள் பரிசாக பொம்மை ஒன்று வாங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்திரா நகர் அடுத்த தனியார் அரிசி ஆலை அருகே சென்றபோது சாலையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழ்மாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து காயமடைந்த திருப்பதியான், சஞ்சய் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்மாறனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.