சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு செந்தில்குமார் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக செந்தில்குமார் லஞ்சம் வாங்குவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய வந்த ஒருவர் செந்தில்குமார் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி அந்த நபர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் இடைத்தரகராக செயல்பட்ட சிவா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.