சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நவீன நடமாடும் வேன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி தமிழக போலீசார் தற்போது முக்கியமான பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் துறையும் நவீன வேனை வாங்கி பயன்படுத்த உள்ளதாக  திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த வேன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் கொண்டுவரப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளால் அந்த வேனில் உள்ள வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வேனின் பயன்பாடு குறித்து டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடம் கேட்ட போது, அவர் கூறியுள்ளதாவது, இந்த வேன் ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு அறை போன்றது என்றும்  இதன் உள்ளே சுழலும் வகையிலான அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் வயர்லெஸ் கருவியின் மூலம் இதில் இருந்து பேசி தகவலை தெரிவிக்கலாம். பின் முக்கிய நிகழ்வுகளில் ஏராளமான கேமராக்களை பொருத்தி இந்த வேனில் இருந்தபடியே கேமரா காட்சிகளை ஒருங்கிணைத்து பார்த்து கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யலாம். மேலும் இந்த வேன் நல்ல பயன் உள்ளதாக  உள்ளது  என அவர் தெரிவித்தார்.