வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,  வட தமிழகத்தில் ஒரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக குமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து மூன்று தினங்களை  பொருத்தவரை தமிழகம் – புதுவை –  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பொறுத்தவரை அடுத்தவரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை,  குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,  நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

மீனவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதிகளுக்கும்,  அக்டோபர் 26ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் இருக்கின்ற மீனவர்கள் கரைக்கு  திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.