தஞ்சாவூர் மாவட்டத்தில் மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பாக பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம், குடும்ப இணை இயக்குனர் மலர்விழி போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, மாநில அளவில் தஞ்சாவூர் கண்பூரை அறுவை சிகிச்சையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் உறுப்பு தானங்களில் நம் நாம் முன்னோடியாக இருந்து வருகிறோம். அதேபோல் மதுரை, கோவை, சென்னை, திருச்சி, சேலம் போன்ற பெரிய மாவட்டங்கள் இருக்கிறது. ஆனாலும் பிரசவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டை கூறிக் கொள்கிறேன். மேலும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் நல்ல மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வருகிறது. மகப்பேறு விகிதத்தை பார்க்கும்போது மாநில அளவைவிட அதிகம் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கத்தான் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.