கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தேவராஜ் தனது உறவினர்களான உமா மகேஸ்வரி, மணிமேகலை, சாந்தி ஆகியோருடன் காரில் மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூரில் காரை நிறுத்திவிட்டு தேவராஜ் சில பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கார் நகர தொடங்கியது. இதனை பார்த்ததும் காரில் இருந்த 3 பெண்களும் அச்சத்தில் சத்தம் போட்டனர்.

அவர்களது சத்தம் கேட்டு தேவராஜு ம், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வருவதற்குள் கார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதனால் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 பெண்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.