கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா நடைபெற்று வருகின்றது. இதில் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி அரவிந்த்ராஜ் என்பவர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டியில்  இதுவரை 4க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வி. மாதேப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான். மாடு முட்டியதில் படுகாயமடைந்த பவன் குமார் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பலியானான்..