1952-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சரான பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு சென்னை காமராஜர் அரங்கில் அந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் உள்ள மெக்கானிக் ஷெட்டிற்கு கார் கொண்டுவரப்பட்டது. தற்போது கார் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கார் ஷெட்டின் உரிமையாளர் அஸ்வின் ராஜ் வர்மா கூறியதாவது, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி காமராஜர் உபயோகப்படுத்திய காரை புதுப்பித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி காமராஜர் அரங்கத்தில் இருந்து காரை எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம். மேலும் காருக்கான கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் போன்றவற்றை அமெரிக்காவிலிருந்து ஆர்டர் செய்து வரவழைத்தோம்.

சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்கள் புனரமைக்கும் நிபுணர் அர்ஜுன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்திருக்கிறோம். தற்போது பொதுமக்கள் ஆர்வமுடன் காரை பார்த்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். வருகிற 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த கார் சென்னை காமராஜர் அரங்கத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என கூறியுள்ளார்.