கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சன்னதி தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா சிலை சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் 10 மணிக்கு ஜெயச்சந்திரன் குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கார்டை சொருக முயன்ற போது தானாக எந்திரத்தில் இருந்து பணம் வந்தது.

அதனை எண்ணி பார்த்தபோது 50,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு ஜெயச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அந்த பணம் தன்னுடையது இல்லை என்பதால் நேர்மையாக ஜெயச்சந்திரன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளரிடம் பணத்தை ஒப்படைத்தார். இதுகுறித்து மேலாளர் கூறியதாவது, சம்பந்தப்பட்ட ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதோடு, டெபாசிட் செய்யும் வசதியும் இருக்கிறது.

ஜெயச்சந்திரன் செல்வதற்கு முன்னதாக யாராவது ஒரு வாடிக்கையாளர் எந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்திருக்கலாம். ஆனால் எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உரிய வங்கி கணக்கில் பணம் டெபாசிட் ஆகாமல் இருந்திருக்கும். இது தெரியாமல் அந்த வாடிக்கையாளர் அங்கிருந்து சென்றிருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை வரவழைத்து அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஜெயச்சந்திரன் நேர்மையாக செயல்பட்டது பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.