ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பின் குற்ற பத்திரிக்கையை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. மேலும் சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் புதிய குற்றபத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சண்முகையா ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். ஒரு அதிகாரி மீது மட்டும் இந்த குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…  குறிப்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டம் முன்னாள் செயலாளராக இருந்த அர்ஜுனன் என்பவர் சிபிஐக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் சிபிஐ விசாரணை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும்  மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை என்பது தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐயின் இந்த நடவடிக்கை சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும்,  சிபிஐயின் இறுதி அறிக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கொலை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர்கள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் மீண்டும் அர்ஜுனன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கக்கூடிய நீதிபதி சண்முகையா,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு படுகொலை வழக்கில் ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐனுடைய குற்றப்பத்திரிக்கை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.  எனவே இது நிராகரிக்கப்படுகிறது. மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிக்கை  செய்ய வேண்டும் என நீதிபதி சண்முகையா உத்தரவிட்டு இருக்கிறார்.