மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிர படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமனம் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை நியமித்து 4.12.2023 அன்று ஆணை வெளியிடப்பட்டது. இப்பணிகளை மேலும் தீவிர படுத்த ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன் பின்வரும் கூடுதல் அமைச்சர்களை நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

அதன் விவரம் பின்வருமாறு :

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி அவர்கள் கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளுக்கும், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்ய நாதன் அவர்கள், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ் ராஜ கண்ணப்பன் அவர்கள் ராயபுரம் பகுதிக்கும்,

ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும்,

மேலும் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணித்து அலுவலர்களுக்கு மீட்பு பணிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கி மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுடன் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்பு பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி. ஆர்.பி ராஜா அவர்களையும் நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே.ஆர் என் ராஜேஷ்குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.