தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தொடர் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்தும் அதனால் மக்கள் அடைந்த பயன் குறித்தும் விளக்கம் கொடுத்த அவர் தற்போது துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்து வருகிறார். அதன்படி,
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு.
தமிழக உயர்கல்வித்துறைக்கு ரூ.8505 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு 718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக கரையோரம் பூங்கா ஆகியவைகளை அமைத்து நதிக்கரை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 374 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
மருத்துவத்துறைக்கு ரூ.22090 கோடி நிதி ஒதுக்கீடு. நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர்பயன்பெற்றுள்ள நிலையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதற்காக 413 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதனால் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாடு விளங்கும்.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு.
கடந்த ஐந்து வருடத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 77800 இணைய வழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறைக்கு 13062 கோடி நிதி ஒதுக்கீடு. இதில் மகளிர் விடியல் பயணத்திற்கு மட்டும் 1722 கோடி நிதி ஒதுக்கீடு.
மின்சார தேவையை கருத்தில் கொண்டு எரிசக்தி துறைக்கு 18091 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3934 கோடி நிதி ஒதுக்கீடு. அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 385 மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற 327 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறும் நிலையில் மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றியமைக்க 229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ. 11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 வருஷ அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஆண்டுக்கு தேவையான மொத்த நிதியும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
