ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாகவும், இதை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு தேர்தலின் போதும் பணம் கொடுத்து வாக்கு  வாங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்த அவர், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்றும் புகார் கூறியிருந்தார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்தார்..

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும், அந்த குழு அமைக்கப்படும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்..

இந்நிலையில் இந்த மனு இன்று பொறுப்புத்  தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..