புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாகவுள்ள அதிமுகவிடம் கலந்து பேசி ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளோம்.

இதனிடையில் பா.ஜ.க எங்களோடு இருப்பார்கள் என முழுமையாக நம்புகிறோம். அதிமுக, தமாகா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என முழுமையாக நம்புகிறேன். மேலும் நாங்கள் நிறுத்தக்கூடிய வேட்பாளர் ஒரு பலமான வேட்பாளராகவும், மண்ணின் மைந்தராகவும் இருப்பார். அதோடு திமுகவுக்கு உள்ள எதிர்மறை ஓட்டு மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இதனால் அதுவே எங்களுக்கு வெற்றியின் ஒரு அடித்தளமாக அமையும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.