சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான பிரசன்னா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரசன்னாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவர் டோமினிக்கிற்கும் பிரசன்னாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் பிரசன்னாவை அவரது மனைவியும் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் பிரசன்னாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் அவரது மனைவி வெளியே சென்று விட்டார்.

அதே சமயம் போதை மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த பிரசன்னாவை மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த பிரசன்னாவின் மனைவி தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசன்னாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அந்த பெண்ணின் கணவர் டோமினிக் உள்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.