தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாரியப்பனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டார். சம்பவம் நடைபெற்ற அன்று சங்கரன்கோவில் உச்சமாகாளி அம்மன் கோவில் தெரு அருகே மாரியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷும், செல்வமும் அவரிடம் பீடி கேட்டுள்ளனர்.

அப்போது தான் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டதாக மாரியப்பன் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சுரேஷும், செல்வமும் இணைந்து மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்து மாரியப்பன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.