உத்திர பிரதேசம் சம்பல் பகுதியில் உள்ள ஷாகி ஜமா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அந்த மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 19ம் தேதி காவல்துறையினர் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் ஆய்வு செய்வதற்காக வந்த குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் நீதிமன்றம் மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் கடந்த 1ம் தேதி பேரணி கூட்டம் நடைபெற்றது.
அந்தப் பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவன் மல்லிகார்ஜுன கார்கே நாட்டிலுள்ள எல்லா மசூதியிலும் கணக்கெடுப்பு நடத்தி சமூகத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. அவர் மக்களின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்ய தவறிவிட்டார். இஸ்லாமியர்கள் கட்டியதால் செங்கோட்டை, தாஜ்மஹால், சார்மினார் போன்ற அடையாளங்களை பாஜக இடிப்பார்களா? எப்போதும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையை உடைக்க மோடி எல்லாவற்றையும் செய்கிறார். சமூகத்தையும், ஜாதியையும் கூட பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என்று கூறினார்.